கூலிப்படையை படைவீரர்களென கொண்டாடும் டெலோ?


உத்தேச அரசியலமைப்பினை முன்வைப்பதில்லையென்ற முடிவுக்கு ரணில் வந்துள்ள நிலையில் அரசியலமைப்பிற்கான நிபுணர்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ அறிவித்துள்ளது.

இன்று ரெலோ அரசியல் உயர்பீட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, ஊடக அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று பகல் முழுவதும் உயர்பீட உறுப்பினர்கள் தீவிர கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிக்கையை வெளியிட்டனர். எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அரசியல் உயர்பீடத்தில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களில், எட்டுப்பேர் கலந்து கொண்டனர்.

இலங்கை தேசிய கேள்வியாக பல தசாப்தங்களாக நீடித்துக் கொண்டிருப்பதும், பொதுமக்கள், தமிழ் போராளிகள் மற்றும் சிங்கள படை வீரர்கள் உட்பட இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட நீண்டதோர் யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான இனப்பிரச்சனைக்கு, இலங்கைத்தீவு ஒரே நாடு என்ற வரையறைக்குள் நீதியானதும், நிலைத்து நிற்க கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றிணை ஜனநாயக வழிமுறைகள் ஊடாக ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

இத்தகைய அரசியல் தீர்வு என்பது சுதந்திர இலங்கையில் தமிழ் தேசிய இனம் ஆனுபவித்திருக்கும் பாரபட்சம், அநீதி, மற்றும் துன்பதுயரங்களிற்கு முடிவுகட்டும் விதத்தில் எமது மரபுவழி தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண சுயாட்சி கொண்ட அரசியல் நிர்வாக ஏற்பாட்டினை அமைகப்பதாக இருக்க வேண்டும் என்பதிலும், இனப்பிரச்சனைக்கு அடித்தளமாக இருந்து வந்திருக்கும் ஒற்றையாட்சி முறைக்கு பதிலாக சமஸ்டி ஆட்சிமுறை என்றழைக்கப்படும் இணைப்பாட்சி முறையில் அமைய வெண்டும் என்பதிலும் எமது கட்சியும் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த பல தேர்தல்களில் மக்கள் ஆணையை பெற்றுள்ளது. அதிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.

இந்த அரசியல் பின்னணியில்  இப்போது முன்வைக்கப்பட்டள்ள அரசியல்  தீர்வுத்திட்டம் தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கையை கவனமாகவும், நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில் அதை நிராகரிப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் என்.சிறிகாந்தா ஆகியோர் அதில் கையொப்பமிட்டுள்ளனர்.

No comments