நாடாளுமன்றம் சென்ற நல்லூர் பிரதேசசபை?


நாடாளுமன்ற செங்கோலின் படம் பொறித்து,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதத் தலைப்பு போன்ற வடிவத்தில் கடிதத் தலைப்பை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பயன்படுத்துவது சர்ச்சையாகியுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாது கடிதத் தலைப்பு ஒன்றை தாமாகவே உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றார்.
அவர் பயன்படுத்தும் கடிதத் தலைப்பில் அரசின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளதுடன்  நல்லூர் பிரதேச சபையின் பழைய இலட்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது நாடாளுமன்றத்தின் செங்கோலின் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபையின் தவிசாளரை கேட்டபோது,எமது சபையில் உறுப்பினர்கள் கடிதத் தலைப்பு பயன்படுத்துவது தொடர்பில் இதுவரை பேசப்படவில்லை. அத்துடன் சபையின் இலட்சினையில் நாம் சில மாற்றங்களைச் செய்துள்ளோம். அதனை சபைக்கும் தெரியப்படுத்தி ஆராய்ந்துள்ளோம். குறித்த உறுப்பினரின் கடித தலைப்பு தொடர்பில் தெரியாது என தெரிவித்தார்.

இது தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,பிரதேச சபை உறுப்பினர்கள் அரசின் இலட்சினை, செங்கோல் என்பவற்றில் கடிதத் தலைப்புகளைப் பாவிக்க முடியாது. மேலும் சபையின் அனுமதி பெற்றே கடிதத் தலைப்புக்களை பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்துவதாயின் அவர்களின் பெயரும், பதவி நிலையும் மட்டுமே பொறிக்க முடியும். இதனை விடுத்து முரணாக செயற்படுவது குற்றம். இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments