யாழில் வாள்வெட்டுக்களை பொலிசாரே ஊக்குவிக்கிறனர் - நீதிமன்றில் குற்றச்சாட்டு


யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர் என யாழ். நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

யாழ். கொக்குவில் தொடருந்து நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான சிறியரக வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கோப்பாய் பொலிஸாரால் நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டார்.

முச்சக்கர வண்டி சாரதியான சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரிடம் மீட்டதாக சிறிய ரக வாள் ஒன்றை பொலிஸார் மன்றில் சான்றுப் பொருளாகச் சமர்ப்பித்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர் தனது முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திய 2 ஆண்கள் ஒரு பெண்ணை தொடருந்து நிலையத்தில் இறக்கிவிடச் சென்றார். அவரது முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் தொடருந்து நிலையத்துக்கு அண்மையாக நின்ற பொலிஸாரைக் கண்டதும் ஓட்டம் எடுத்தனர்.

அவர்களில் ஆண்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், முச்சக்கர வண்டி சாரதியான இந்த சந்தேகநபரையும் கைது செய்தனர். அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து வாள் ஒன்றை அவரிடம் மீட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர்" என்று சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்து சந்தேகநபர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்தார். "சந்தேகநபரிடமிருந்து கைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் அவர் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையில் வீதிச் சுற்றுக்காவலில் ஈடுபடும் இடங்களின் ஒளிப்படங்கள் இருந்தன.

சந்தேகநபர், மானிப்பாய் பகுதியில் எடுத்த அந்தப் படங்களை, வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அனுப்பி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையில் ஈடுபடும் இடங்கள் தொடர்பில் அவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்" என்று பொலிஸார் மன்றுரைத்தனர். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரால் முச்சக்கர வண்டியில் ஏற்றிவந்து இறக்கிய இருவர், விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் அவர்கள் மன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

No comments