ரணில் பக்கமாம் கூட்டமைப்பு?
தலைமை அமைச்சராக நியமிக்கப்பட் டுள்ள மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. மகிந்த மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததன் மூலம் ரணிலை ஆதரிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடுநிலை வகிப்பது என்பது ‘‘அராஜகத்துக்கு’’ வெற்றியீட்டுவதற்கு உதவுவதாக அமைந்துவிடும் என்றும் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக்கூட்டம் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தது. நீண்ட கலந்துரையாடலின் பின்னர் மேற்படி முடிவை எடுத்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதம்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் தலைமை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அரச தலைவரிடம் இல்லை. 19ஆம் திருத்தத்துக்கு முன்னர் அரச தலைவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ஆம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது. தலைமை அமைச்சரை நீக்குவதாகவும், வேறொருவரை நியமிப்பதாகவும் அறிவித்து அரச தலைவர் வெளியிட்ட அரசிதழ்கள் அரசமைப்புக்கு முரணானதும் சட்டவிரோதமானவையுமாகும்.
கூட்டமைப்பு கண்டிப்பு
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக அரச தலைவர் விடுத்த அறிவிப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களாட்சிக்கு மாறான செயலாகவும் நாடாளுமன்றத்தின் மீயுயர் தன்மையைப் பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத ஒருவரை தலைமை அமைச்சராக அறிவித்துவிட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அவர் நிரூபிக்கவேண்டிய தேவையைத் தாமதிப்பதற்கும் முறியடிப்பதற்கும் ஏதுவாகச் செய்யப்பட்ட காலநீடிப்பே இதுவாகும்.
இந்தக் கால நீடிப்பை உபயோகித்து அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாகக் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமது பக்கத்துக்கு முறைகேடாக இழுத்தெடுத்து நாடாளுமன்ற பெரும்பான்மையை கபடமாகப் பெற்றுக்கொள்வதற்கான இந்த மக்களாட்சிக்கு மாறான செயலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதோடு தனது எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்தச் சதி முயற்சியில் சிக்குண்டது குறித்து எமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுகிறோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
மகிந்தவுக்கு எதிர்ப்பு
மேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக, அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் ‘நடுநிலை’ வகிப்பதென்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய மக்களாட்சிக்கு மாறான செயல் என்பதே எமது நிலைப்பாடு – என்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறீக்காந்தா, புளொட் சார்பில் சித்தார்த்தன், ஆர்.இராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment