வெளியே வந்தது இராணுவ உந்துருளிப் படையணி!


யாழ்.குடாநாட்டில் கடந்த காலங்களில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை அரங்கேற்றிய இராணுவத்தினரின் உந்துருளிப் படையணி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளது.பலாலி படைத்தளத்திலிருந்து இயக்கப்படும் குறித்த அணி கடந்த சில வருடங்களாக வீதியில் காணக்கிடைக்காத ஒன்றாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் குடாநாட்டின் நகரப் பகுதி மற்றும் தென்மராட்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதிகளிலும் வடமராட்சியின் சில பகுதிகளிலும் நேற்றுக் காலையில் உலாவிய உந்துருளிப் படையணியினர் மாலையில. நகரின் பலாலி வீதி , காங்கேசன்துறை வீதிகளின் ஊடாக நகரின் மையப் பகுதிக்குள் உலாவினர் 12 உந்துருளிகளில் ஆயுதம் தாங்கிய படையினரே இவ்வாறு வலம் வந்தனர்.

இவ்வாறு உந்துருளியில் பயணித்த படையினர் பயணித்தமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாதபோதிலும் மிகவும் வேகமாக அச்சுறுத்தலான வகையிலேயே பயணித்தமையினை கண்ட மக்கள் பதற்றமடைந்த நிலையில் ஒதுங்கி நின்றனர்.

குறிப்பாக மாவீரர்துயிலுமில்லங்களை இலக்கு வைத்து முகங்களை கறுப்பு துணிகளால் மூடிக்கட்டியவாறு குறித்த ரோந்து அணி செயற்பட்டது.

பலாலி முகாமினுள் இருந்தே குறித்த அணி புறப்பட்டு வந்ததுடன் திரும்பி சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாவீரர் தினத்தன்று மக்களை அச்சமூட்டி வீடுகளுள் முடக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது. 

No comments