ஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர், அவரின் பாதுகாப்புக் காரணம் எனக் கூறி, ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகவியலாளர் சந்திப்புக்களுக்கு செல்லும் ஊடகவியலாளர்கள் அலைபேசி எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பத்திரிகைத்துறையைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பத்திரிகை ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் ஒலிப்பதிவுக் கரு​வியை பயன்படுத்துவதில்லை. தங்களது அலைபேசிகளிலேயே அவர்கள், ஊடகசந்திப்புக்களை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்புக்களுக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் அலைபேசிகளை அலுவலகத்தின் உள்ளே எடுத்துச் செல்வதற்கும் தற்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி உத்தியோகப்பூர்வமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியில் இணைந்துகொண்டார்.

இந்நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு உள்ளே அலைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அலைபேசிகளை உள்ளே எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தமை அங்கிருந்த பல்வேறு ஊடகவியலாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

No comments