காவல்துறை விரட்டியதால் உந்துருளி மின்கம்பத்துடன் மோதியது! பயணித்த மூவர் காயம்!

வவுனியாவில் போக்குவரத்துக் காவல்துறையினரால் விரட்டிச் செல்லப்பட்ட உந்துருளி மின்சார கம்பத்துடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி, இறம்பைக்குளம் சந்தியில் இடம்பெற்ற இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகர் பகுதியில் இருந்து பிளசர் ரக உந்துருளியில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். குறித்த உந்துருளியை நகரப் பகுதியில் போக்குவரத்து கடமையில் நின்ற போக்குவரத்து காவல்துறையினர் இருவர் மறித்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞர்கள் உந்துருளியை நிறுத்தாது சென்றபோது, போக்குவரத்துக் காவல்துறையினர் தங்களது உந்துருளியில் விரட்டிச் சென்றுள்ளனர்.

இதன்போது ஹொரவப்பொத்தானை வீதி வழியாக தமது உந்துருளியை நிறுத்தாது செனற இளைஞர்களை காவல்துறையினர் நெருங்கிய வேளை இறம்பைக்குளம் பாடசாலை அருகில் உள்ள சந்தியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.

உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர்  சிறு காயங்களுக்குள்ளானார்.

கூமாங்குளம் பகுதியினை சேர்ந்த சபான் வயது- 20 , சுயிவ லக்மால் வயது 18 ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாவும் அவர்களது உடல் நிலை தொடர்பாக தற்போது தெரிவிக்க முடியாது என வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற குறித்த பகுதிக்கு வவுனியா காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, போக்குவரத்து காவல்துறைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் வருகை தந்து விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.





No comments