கிளிநொச்சி பதற்றம்:ரௌடி கும்பல் அட்டகாசம்!

வடக்கில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாது இலங்கை காவல்துறை திண்டாடிவருகின்றது.அவ்வகையில் கிளிநொச்சி பொதுச் சந்தையினை இன்று மாலை ஆறு மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்கள் வரையில், ரவுடிக்கும்பல் ஒன்று தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல் சந்தைக்கு வந்தவர், போனவர், பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாகனம் ஒன்றில் வந்திறங்கிய இருபது பேர் அளவில் கொண்ட இளைஞர் குழு ஒன்று எங்கேயடா குமார் என்று கேட்டப்படி கையில் கத்தி, இரும்புகள், இரும்பினால் தாக்குதல்களை மேற்கொள்ளவென செய்யப்பட்ட கூரிய ஆயுதங்கள் என்பவற்றுடன் அங்கும் இங்கும் ஓடி திரிந்து அட்டகாசம் புரிந்துள்ளனர். 

சந்தையின் வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு வரும் பொது மக்கள் என அனைவரையும் தாக்கியுள்ளனர். கை குழந்தையுடன் பொதுச் சந்தைக்கு வந்த பெண்னையும் தாக்குவதற்கு முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் சிலர் வருகை தந்த போது இரண்டு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதன் பின்னர் சந்தையில் நின்றவர்கள் மீது குறித்த ரவுடிக் கும்பல் தாக்குதல்களை மேற்கொண்டது. 

சம்பவத்தின் போது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் சந்தைக்கு விரைந்த போது குறித்த ரவுடிக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதன் போது இருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். பிடிக்கப்பட்ட ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments