புதுக்குடியிருப்பு சூட்டில் இளைஞர் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளம் பகுதியில் (11.09.18) அன்று இரவு வீடுபுகுந்த ஆறுபேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் காயமடைந்த புதுக்குடியிருப்பு இளைஞன் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், புதுக்குடியிருப்பு சிவநகரினை சேர்ந்த இளைஞர் மாணிக்கபுரத்தினை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து திருமணம்செய்துள்ளார். குறித்த யுவதி ஏற்கனவே கைவேலி மருதமடுகுளம் பகுதியினை சேர்ந்த செ.கோபிநாத் என்ற இளைஞனை காதலித்துள்ளார்.
இந்தநிலையில் முன்னாள் காதலனான குறித்த இளைஞன் முன்னாள் காதலியுடன் இருந்த புகைப்படத்தினை முகநூலில் வெளியிட்டுள்ளார். கோபிநாத்தின் முன்னாள் காதலியை தற்போது திருமணம் செய்துள்ள இளைஞன் குறித்த படத்தினை முகநூலிலிருந்து அகற்றுமாறு வற்புறுத்தி வந்துள்ளதுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த படங்களை முகநூலிலிருந்து அகற்றாது முன்னாள் காதலன் இருந்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த முன்னாள் காதலியின் தற்போதைய கணவர் தனது நண்பர்களை ஒன்றிணைத்து தனது மனைவியின் முன்னாள் காதலனான மருதமடுகுளம் பகுதியினை சேர்ந்த செ.கோபிநாத் என்ற இளைஞனின் வீட்டிற்கு கடந்த 11.09.18 அன்று இரவு வாள்களுடன் சென்று முதலில் வீட்டின் வெளியில் உறங்கிக்கொண்டிருந்த 21 அகவையுடைய கோபிநாத் மீது வாள்வெட்டிவிட்டு பின்னர் அவரது தந்தையான 45 அகவையுடைய செல்வக்குமார் மீதும் வாள்வெட்டிவிட்டு வீட்டுக்குள் புகுந்த நபர்கள் தயாரான 43 அகவையுடைய செ.குசேலகுமாரிமீதும் வாளால் வெட்டியுள்ளார்கள். இந்தவேளை வீட்டில் இருந்த பெண் பிள்ளைகள் இருவரும் வீட்டின் அறைக்குள் சென்று கதவினை பூட்டிக்கொண்டுள்ளதால் அவர்கள் தப்பித்து கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
நள்ளிரவு வேளை நடைபெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் உள்ள நாட்டு துப்பாக்கியினை எடுத்து வாள்வெட்டுக்கு வந்த இளைஞர்கள் மீது சுட்டுள்ளார்கள் இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவரை சேர்ந்து வந்தவர்கள் சிறிது தூரம் இழுத்து சென்று அங்கே விட்டுவிட்டு ஏனைய ஜந்து பேரும் தப்பி சென்றுள்ளார்கள்.
இசம்பவத்தினை தொடர்ந்து கிராம மக்களால் பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலீசார் காயமடைந்த நால்வரையும் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவ மனையில் அனுமதித்துள்ளார்கள்.
துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான இளைஞன் மாவட்ட மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராபுரம் மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டு அங்கே சிகிச்சை பலனின்றி இன்றுகாலை (13) மரணமடைந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வாள்வெட்டிற்கு இலக்கான குடும்பத்தினை சேர்ந்த மூவரும் மாவட்ட மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையாரான செல்வக்குமார் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இன்னிலையில் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி இன்றையதினம் மரணமடைந்த 02ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 28 அகவையுடைய திருச்செல்வம் கபிலன் என்ற இளைஞன் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
அவர்களில் முதன்மையான புதுக்குடியிருப்பு சிவநகரினை சேர்ந்த 22 அகவையுடைய நபர் ஒருவரும் புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவருவம்,22 அகவையுடை ஆனந்தபுரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவரும் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு பொலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த குழுவினை சேர்ந்த இருவரை கைதுசெய்ய பொலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிசூடு யார் நடத்தினார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித் பொலீசார் வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதினால் அவர்களிடம் இருந்தான வாக்குமூலத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments