அரசியல் கைதிகள் போராட்டத்தில் மேலுமிருவர் இணைவு!


அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளுடன் மேலுமிரு அரசியல் கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.இதனையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.யாழ்ப்பாணத்தை சேர்ந்தபுருசோத்தமன் அரவிந்தன்,வவுனியாவை சேர்ந்த நல்லான் சிவலிங்கம் ஆகிய இருவருமே இன்று முதல் போராட்டத்தில் இணைந்துள்ளனர். 

இந்நிலையில் நாளை திங்கள் முதல் தமது மருத்துவ உதவிகளையும் புறக்கணித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முனைப்படையச்செய்ய அரசியல் கைதிகள் முடிவு செய்துள்ளனர்.அது தொடர்பில் இன்று அவர்கள் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் சிறைச்சாலை அத்தியட்சகரிற்கு அறியத்தந்துள்ளனர்.தமக்கான மருத்துவ உதவிகளை புறக்கணிக்க உள்ளதாக அவர்கள் சிங்கள மொழியில் எழுதி ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளர்.

9 ஆண்டு காலமாக சிறைச்சாலைக்குள் வாடும் தம்மை குறுகியகால மறுவாழ்வு வழங்கியாவது விடுவிக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபட்டனர். மகசின் சிறைச்சாலையிலிருந்து வழக்குக்காக அநுராதபுரம் கொண்டு வரப்பட்ட 2 கைதிகளும் அவர்களுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.இன்று மேலுமிருவர் இணைந்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 12 ஆகியுள்ளது.

முன்னரும் பல தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தமையினால் அவர்களது உடல் நிலை மிகப் பலவீனமான இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் மருத்துவ உதவிகளையும், சேலைனையும் பெற்றுக் கொள்வதையும் அவர்கள் தவிர்க்கவுள்ளனர்.

No comments