புனித பிரதேசமாக மடு பிரகடனம்

மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இந்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

400 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த மடு அன்னையின் தேவாலயம், சிறிலங்காவில் புனித பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் முதலாவது கத்தோலிக்கத் தேவாலயமாகும்.

புனித பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் மடு தேவாலயப் பகுதிக்கான வீதிகள், அபிவிருத்தி செய்யப்பட்டு, போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படும். நீர் விநியோகம், சுகாதாரம், தங்குமிட வசதி, மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தையும் சிறிலங்கா ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 29ஆம் நாள் மடு அன்னையின் தேவாலயத்துக்கு தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதன் பின்னரே அவர் இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

மடு அன்னையின் தேவாலயத்தில் நடக்கும் திருவிழாக்களில், நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவது வழக்கமாகும்.

No comments