பின்னணியில் படையும் காவல்துறையும்:குகதாஸ்!

யாழ்.மல்லாகம் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி  சட்டத்தை கையில் எடுத்த முறை கூட பல சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
 
வடக்கை அச்சுறுத்தலில் வைத்திருப்பதே அரச இயந்திரத்தின் நோக்கமாகும். வடக்கு மாகாணத்தில்  நடைபெறும் வாள்வெட்டு சம்பவங்கள் அரச இயந்திரத்தின் பின்னணியில் தான் நடைபெறுகின்றது என்பது அதன் செயற்பாடுகளில் இருந்து சாதாரண மக்களுக்கு கூட தற்போது புரிந்துள்ளது.

இதற்கு காரணம் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் வடக்கில் மட்டும் தான் சிவில் நிர்வாகத்தில் இராணுவ பிரசன்னம் அதிகமாகவுள்ளது.இதனால் சிவில் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு  மேலாக இராணுவ புலனாய்வாளர்களின் ஆதிக்கம் வடக்கில் அதிகளவில் காணப்படுகின்றது. 

இதற்கு உதாரணமாக  புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 12000 பேரை தொடர்ந்து கண்காணித்து விசாரணை நடாத்தி அவர்களை கட்டுப்படுத்த முடியுமாயின் வாள்வெட்டில் ஈடுபடும் சாதாரண 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்களை ஏன் கட்டுப்படுத்த முடியாது . இதுதான் வடக்கு மக்களின் முன் எழுகின்ற கேள்வியாக இன்று உள்ளது. 

ஆகவே இச் செயற்பாடுகளின் பின்னணியில் அரச படையும் அரசும் உள்ளது என்பது புலனாகிறது.மல்லாகம் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி  சட்டத்தை கையில் எடுத்த முறை கூட பல சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளது.

No comments