வடமராட்சி கிழக்கு: நாளை வரை காலக்கெடு!


வடமராட்சி கிழக்கில் நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் நாளை முதலாம் திகதியுள் வெளியேற காலக்கெடுவிதிக்கப்பட்டுள்ளது.உள்ளுர் மீனவ அமைப்புக்கள் இத்தகைய அறிவிப்பினை விடுத்துள்ளன.

இந்நிலையில் மருதங்கேணியில் வாடி அமைத்து வரும் தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு தெரிவித்து பாதுகாப்பும் அளித்து வருகின்றன என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்று (31) கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.

அங்கு கருத்து வெளியிட்ட கே.சிவாஜிலிங்கம் மருதங்கேணியில் வாடி அமைத்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடாத்திய உள்ளுர் மீனவர்களை அரச படைகள் மற்றும் அதன் புலனாய்வு பிரிவினர்கள் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

வெளி மாவட்ட மீனவர்கள் அடாத்தாக மருதங்கேணி பகுதிகளில் வாடி அமைத்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடின் உள்ளுர் மீனவர்களுக்கும் வெளிமாவட்ட மீனவர்களுக்கும் முரண்பாடுகள் இடம்பெறும். அது முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இங்கே இன ரீதியாக பேசப்படவில்லை. யாழ்.மாவட்ட மீனவர்கள் மன்னார் மாவட்டத்துக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாது. அதே போலவே வெளிமாவட்டங்களில் உள்ள மீனவர்கள் வேறு மாவட்டங்களுக்குள் அத்துமீறி நுழைந்து வாடிகள் அமைத்து மீன்பிடியில் ஈடுபட முடியாதென தெரிவித்துள்ளார்.

No comments