மினி சூறாவளியினால் 23 குடியிருப்புகள் சேதம்


மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 23 குடியிருப்புகள் பாதிப்படைந்துள்ளது.
29.05.2018 அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 14 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 60 பேரை கெட்டபுலா இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் லயன் குடியிருப்பின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன், அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ட வெளிஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் லயன் குடியிருப்பொன்றின் கூரைப்பகுதி காற்றினால் அள்ளுண்டு சென்றதையடுத்து மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளது. உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் இரண்டு குடியிருப்புகள் கடும் சேதமாகியுள்ளதுடன் ஏனைய குடியிருப்புகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது.
பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளை திருத்தியமைக்கும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதுடன் பாதிப்புக்குள்ளாகியவர்கள் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுள்ளனர். இதேவேளை, கந்தபளை போட்ஸ்வூட் பகுதியில் கடும் காற்று காரணமாக மூன்று வீடுகள் சேதமாகியுள்ளது. மேலும், மாலை வேளைகளில் இடி, காற்றுடன் கூடிய மாலை பெய்வதால் அனைவரும் பாதுகாப்புடன், அல்லது பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டும் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments