யாழில். கடலட்டைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Post a Comment