கிளிநொச்சியில் லஞ்சம் கொடுத்து மண் கடத்த முயன்றவர்கள் கைது
கிளிநொச்சி - பரந்தன் பொலிஸ் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களைக் கிளிநொச்சி பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களைக் கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் பொலிஸார் சோதனையிட்டனர்.
அப்போது, புவியியல் மதிப்பீடு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் (GSMB) வழங்கப்பட்ட மணல் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களில் பொலிஸார் கையொப்பமிட்டுப் பதிவிடுவதைத் தடுப்பதற்காக, கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குச் சந்தேகநபர்கள் பணத்தை லஞ்சமாகக் கொடுக்க முயன்றுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்திற்காக வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28, 29, 40 மற்றும் 49 வயதுடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களைக் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியதை அடுத்து, வரும் செப்டம்பர் 21-ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment