சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளை - கோரமின்றி சபை ஒத்திவைக்கப்படுமா ?


சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. 

குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்ததை அடுத்து , நாளைய தினம் உப தவிசாளர் தெரிவு திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. 

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் சபையில் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் இன்றைய தினம் திங்கட்கிழமை எழுத்து மூல சமர்ப்பணங்களுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் தெரிவை, இவ்வழக்கின் தீர்ப்பு வரும் வரை நடாத்த வேண்டாம் எனக் கட்டளையிடுமாறு மன்றிலே கோரப்பட்டது.

அதன் போது, முதலாம் இரண்டாம் எதிர்மனுதாரர்களான ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பாக மன்றில் தோன்றிய  அரச சட்டவாதி, உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அரச செலவிலே வர்த்தமானி அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையால் , அதனை நிறுத்த முடியாது என வாதிட்டார். 

இரு தரப்பின் வாதங்களை அடுத்து , உபதவிசாளர் தெரிவுக்கு தடைவிதிக்க மன்று மறுத்தமையால் , நாளைய தினம் திட்டமிட்டபடி உப தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ளது. 

கோரமின்றி சபை ஒத்திவைக்கப்படுமா ?

நாளைய தினம் உபதவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கும் போது , சபைக்கு பெருமளவான உறுப்பினர்கள் சமூகமளிக்காவிடின் . கோரமின்றி சபை அமர்வு ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில் அது தொடர்பில் தமிழரசு கட்சியின் பொது செயலாளரிடம் வினாவிய போது, நாளைய சபை அமர்வில் தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமது கட்சி உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிப்பார்கள் என தெரிவித்தார். 

சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதில் தமிழரசுக் கட்சியின் 06  உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 05 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  இரண்டு உறுப்பினர்கள் , தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 17 பேர் சபையில் உள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினருக்கு சபை அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்று இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளன 

இவ்வாறான நிலையில் , நாளைய சபை அமர்வில் தமிழரசு கட்சியின் 06 உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,  தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் , 17 பேர் கொண்ட சபையில் 10 பேர் சபை அமர்வில் கலந்து கொண்டால் உப தவிசாளர் தெரிவு நடைபெறும். 

 


No comments