ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது ,கடலட்டை பண்ணைகளை எதிர்த்தவர் இன்று அவற்றை வாரி வழங்குகின்றார்


யாழ் மாவட்டத்தில் முறையற்ற, சூழலுக்கு ஒவ்வாத கடல் அட்டைப் பண்ணைகளை  பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து மீனவ மக்களின் அடையாளங்களை அழிக்க கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முற்படுவதாக கடற் தொழில் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியியுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் 

வடக்கு மாகாணத்துக்கு ஒவ்வாத கடல் அட்டை பண்ணைகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊக்குவிப்பது எமது கடற் தொழில் மக்களை கருவறுக்கம் செயற்பாடாக பார்க்கிறோம்.

இந்த செயற்பாட்டுக்கு பிரதேச செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது கவலையாக உள்ளது.

ஒரு பிரதேசத்தின் அரச காணிகளுக்கு அந்தப் பிரதேசத்தின் உடைய பிரதேச செயலாளர் பொறுப்பாக இருக்கின்ற நிலையில் எமது கடலையும் அரச காணி போல் கையாள நினைக்கிறார்கள்.

எமது கடல் எமக்குச் சொந்தம் கடலை யாரும் பிரித்துக் கொடுக்க முடியாது அவ்வாறாயின் கடலை பகிர்ந்து வழங்குவதற்கான அதிகாரத்தை யாரிடம் பெற்றார்கள் என கேட்க விரும்புகிறோம். 

ஒட்டுமொத்த மீனவ சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி தொழிலை இல்லாமல் ஒழிப்பதற்கு அமைச்சர் தலைமையில் மீளவும் அட்டை பண்ணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

ஏனெனில் ஆட்சி அதிகாரம் இல்லாத காலத்தில் கடல் அட்டை பண்ணைக்கு எதிராக எம்மோடு குரல் கொடுத்த தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் தற்போது அட்டை பண்ணைகளை வாரி வழங்க முற்படுவது ஏன் ?

மீனவ சமூகத்தின் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கிற பல பிரச்சனைகள் தொடர்பில் நாம் தெற்கை சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் கலந்துரையாடி அவர்களும் எமக்காக குரல் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.

குறிப்பாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற மீன்பிடி திருத்தச் சட்டம் முற்றாக நீக்கப்படுவதோடு இந்தியா இழுவை மாடி மீனவர்களின் அட்டகாசங்களுக்கு இராஜதந்திர ரீதியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் மீனவர் பிரச்சினை தொடர்பில் தேர்தல் காலங்களில் சாதகமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்த பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தாமை தொடர்பில் மீனவ சமூகம் போராட்டத்தின் மூலம் அவர்களின் கவனத்தை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம்.

ஆகவே  எமது மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தையும்  அடையாளத்தை அழிப்பதற்கு கடற்தொழில்  அமைச்சர் முனைவாராயின் அதற்கு எதிராக  மக்களை திரட்டி போராடுவோம் என மேலும் தெரிவித்தார்.

அதேவேளை ஊர்காவற்துறை பகுதியில் 1 ஏக்கர் கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்களை ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து பயனாளிகளுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments