குறிகட்டுவான் சுற்றுவட்டத்தில் அம்மன் சிலை ?
யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியொரு மதத்தின் அடையாளமாக அம்மன் சிலை வைக்க முடியாது எனவும், நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலை அல்லது பொதுவான சிலை ஒன்றினை அமைக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினர் தமது நிலைப்பாட்டை முன் வைத்தனர்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை சபை மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது, குறிகட்டுவான் இறங்குதுறை சுற்றுவட்டத்தில் தீவகத்தின் அடையாளமான நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மனின் சிலை வைக்கப்பட வேண்டும் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுமாரனால் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்
அந்நிலையில் ,தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நயினாதீவு என்பது ஒரு சுற்றுலா தளம். இங்கு ஓர் மதத்தின் அடையாளத்தை காட்சிப்படுத்துவது பொருத்தமற்றது. நயினாதீவில் நான்கு மதங்கள் சார் மக்கள் வாழ்கின்றனர். அதேபோல் அனைத்து மதம் சார் நபர்களும் வருகின்றனர்.
எனவே அங்கு நான்கு மதங்களின் அடையாளங்களையும் பிரதிநிதித்துவ படுத்தும் விதமாக அல்லது பொதுவான தீவகத்தின் அடையாளம் ஒன்று வைக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து சபையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சிகளின் சார் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனாலும் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நாகபூசனி அம்மனின் சிலையே வைக்கப்பட வேண்டும் என்ற எடுத்த நிலைப்பாட்டால் அது தீர்மானமாக வேலணை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என தவிசாளர் அசோக்குமார் அறிவித்தார்.

Post a Comment