செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் - நீதி அமைச்சர் உறுதி


செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகளை வழங்க தயாராக உள்ளோம். புதைகுழி தொடர்பிலான நீதியான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஆதரவாக இருக்கும் என நீதி அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார் 

செம்மணி மனித புதைகுழி பகுதியை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில் 

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும். அதற்கு உரிய சகல நடவடிக்கைகளையும் நீதி அமைச்சு செய்யும் 

கடந்த கால அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியது போன்று , எங்களுடைய அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்ற மாட்டாது. எங்கள் அரசாங்கத்தை தமிழ் மக்கள் முழுமையாக நம்பலாம். 

வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இன்றி , குற்றம் செய்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். அதற்காக விசாரணைகள் இன்றி எவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது. 

இராணுவத்தினர் , படுகொலைகளில் ஈடுபட்டு இருந்தால் அதற்கான ஆதாரங்களை முன் வைத்தால் , நிச்சயமாக நாம் இராணுவத்தினருக்கு எதிராகவும்  நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்

No comments