உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!



பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் அதற்கான ஆவணங்களில் கையொப்பம் வாங்கும் நடவடிக்கைக்காக சட்டத்தரணிகள்  இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதனிடையே இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் பாடல்கள் மற்றும் காணொளிகளைத் திருத்தி சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார்.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஜூன் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் சாதாரண பொழுதுபோக்கு மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தடையுமில்லை என்றும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான சட்டவிரோத செயல்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளையும் தவறான தகவல்களையும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.


No comments