தொடர்பில்லை:ஆளுநர் அறிவிப்பு!
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் பொது அறிவிப்பு வெளியிடப்படுகின்றதென வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னதாக யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு ஆளுனரின் அரசியல் தலையீடு உள்ளதென தெரிவித்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் ஒருமித்த நிலைப்பாடு ஏற்படவில்லை. ஒரு பகுதி சட்டத்தரணிகளால் மாத்திரம் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏனைய ஒரு பகுதி சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து குழப்பத்தினால் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பரமராஜா, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைமை பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்..
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா, கடமையிலிருந்து திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையேற்ற ஒரு மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலருக்கு எதிராக வடக்கு ஆளுனர் அமைத்த விசாரணைக்குழுவுக்கு எதிராக, யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அவை தொடர்பில் வடக்கு ஆளுனர் அரச உயர்மட்டத்தில் முறையிட்டு, அரசியல் தலையீட்டை கோரியதாக தற்போது குற்றம்சாட்டப்படுகிறது.
இதனிடையே தொடர்புடைய வழக்கு மீள விசாரணைக்கு வந்த போது, உள்ளூராட்சி பிரதிநிதிகள் சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்த முயன்றதாக தெரிவித்ததுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜாவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. வடக்கு ஆளுனரின் மூலமான அரசியல் தலையீட்டினால், நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வந்திருந்தது.

Post a Comment