கிரிஷாந்தி கொலை குற்றவாளியை யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் - சுரேஷ் கோரிக்கை
கிரிஷாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியை செம்மணி புதைகுழி பகுதிக்கு அழைத்து வந்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், செம்மணியை அண்டிய பகுதிகளில் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் மேலதிக புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்
யாழில். இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிரிஷாந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள சோமவன்ச ராஜபக்ஷ பல ஆண்டுகளாக செம்மணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.
செம்மணி மாத்திரம் அன்றி அதன் அயலூர்களான, கொழும்புத்துறை, அரியாலை உள்ளிட்ட பகுதிகளிலும் புதைகுழிகள் இருப்பதாக கூறியுள்ளார்.
எனவே, புதைகுழிகள் தொடர்பான வழங்கக்கூடிய சோமவன்ச ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
அதேவேளை, மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளின் நிலைமை இதுவரை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படாது மூடு மந்திரமாக காணப்படுகிறது.
தற்போது செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.
செம்மணியில் மீட்கப்படும் என்பு கூடுகளை அப்படியே வைத்திருக்காது அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதனை துல்லியமாகக் கண்டறிவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் போதுமான அளவில் இல்லை
எனவே மீட்கப்படும் என்பு கூடுகளை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீன சர்வதேச விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்,
இந்த விசாரணையின் நோக்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்லாது, காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உண்மையை வெளிப்படுத்தவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வழிமுறைகளை உருவாக்குவதுமாக இருக்க வேண்டும்
இதற்காக மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை ஆணையகம் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலுவான குரல் எழுப்ப வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Post a Comment