இத்தாலியின் மொடெனா நகரில் கூட்டம் மீது மகிழுந்து மோதியதில் எட்டு பேர் காயமடைந்தனர்!


நேற்று சனிக்கிழமையன்று வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில் ஒருவர் கூட்டத்தின் மீது மகிழுந்தை ஓட்டிச் சென்றதில் , குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மகிழுந்து ஒரு கடை ஜன்னலில் மோதிய பின்னர் ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றார் என்று மொடெனா மேயர் மாசிமோ மெஸ்ஸெட்டி உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் கையில் கத்தியுடன் காணப்பட்டார். ஆனால் அவரால் யாரையும் குத்த முடியவில்லை. அவர் யாரையோ தாக்க முயன்றது போல் தெரிகிறது என்று மேயர் கூறினார்.

காவல்துறையினர் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணைக்காகத் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்று மெசெட்டி மேலும் கூறினார்.

ஓட்டுநர் 31 வயதுடையவர். பெர்கமோவில் பிறந்தவர். மொடெனா மாகாணத்தில் வசித்து வருகிறார்.

அவர் மனச்சிதைவுக் கோளாறுகளுக்காக ஒரு மனநல மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் ஒரு பராமரிப்பு நிலையத்தில் அந்த ஆரம்பகட்ட கண்காணிப்புக் காலத்திற்குப் பின்னர் நாங்கள் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது என்று நகர ஆட்சியர் ஃபேப்ரிசியா ட்ரையோலோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஓட்டுநர் போதைப்பொருள் அல்லது மது போதையில் இருந்ததற்கான உடனடி அறிகுறி எதுவும் இல்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக அவரது வீடு சோதனையிடப்பட்டது.

இத்தாலியப் பிரதமர்  ஜார்ஜியா மெலோனி சமூக ஊடகப் பதிவு ஒன்றில் இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமானது"என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பொறுப்பான நபர் தனது செயல்களுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வைக்கப்படுவார் என்று நம்புகிறேன் என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார். 

No comments