யாழ். பூம்புகார் மாதிரிக் கிராம நிலத்தடி நீர் ஆய்வுக்கு ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நீர் பாதுகாப்பிற்கான WASPAR செயற்றிட்டத்தின் கீழ் செயல்படும் இளம் நீர் வாண்மையாளர் வட்டத்தினர், யாழ் அரியாலை–பூம்புகார் மாதிரிக் கிராமத்தின் நிலத்தடி நீர் வளத்தை ஆய்வு செய்வதற்கான கள ஆய்வொன்றை மேற்கொண்டனர்.
இக் களஆய்வின் போது, பூம்புகாரில் உள்ள நீர் வளம் மற்றும் நீர்ப்பயன்பாடு தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் நீருடன் தொடர்புடைய சவால்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும், பூம்புகாரில் உள்ள எழுமாறாக தெரிவு செய்யப்படட சில கிணறுகளில் நீரின் பௌதிக தன்மையானது ஆராயப்பட்டது .
நிலத்தடி நீர் சார்ந்த பிரச்சனைகளை பல வருடங்களாக எதிர் கொள்ளும் மக்கள் பலர் வாழுகின்ற பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆரம்பகட்ட ஆய்வானது அங்குள்ள நீர் மூலங்கள் தொடர்பில் மேலும் விரிவான ஆய்வுகள் செய்வதற்கு அடித்தளமாக அமைகின்றது.
இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம், கிராம மக்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் செயற்றிட்டக் குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியின் வழியாக பூம்புகார் கிராமத்தில் நிலத்தடி நீரின் பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த பயன்பாட்டை நீண்டகால நோக்கில் உறுதிசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
பூம்புகார் கிராமம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வில் WASPAR மற்றும் YWP பிரதிநிதிகள் துறைசார் ஆலோசகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே இவ்வாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment