தமிழரசு:தீர்மானங்களை கிடப்பில் போடக்கூடாது!
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை அடாத்தாக கையகப்படுத்தி , குறுக்காக வேலி அடைத்துள்ள தையிட்டி விகாராதிபதியை காப்பாற்ற முற்படும் இலங்கை காவல்துறைக்கெதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
வலிகாமம் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை ஆக்கிரமித்து விகாராதிபதியால் அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றுமாறு பிரதேச சபை அறிவித்திருந்தது.
இந்நிலையில் விகாராதிபதி பலாலியிலுள்ள இலங்கை காவல்துறையில் முறைப்பாடு செய்ய , காவல்துறையினர் பிரதேச சபை வேலியை அகற்ற கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வழக்கு தொடர்பான கட்டளை இன்றைய தினம் வழங்கப்படவிருந்த நிலையில் , நீதிமன்று அதனை ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் , பிரதேச சபையின் நடவடிக்கைகளில் இலங்கை காவல்துறை தலையீடு செய்வதாகவும் , பலாலி காவல்துறை பிரிவுடன் தொடர்பு பட்ட விடயத்திற்கு தேவையற்ற விதத்தில் தெல்லிப்பழை காவல்துறையினர் தலையீடு செய்து மன்றில் முன்னிலையாகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய முறைப்பாட்டாளரான விகாராதிபதி மன்றில் முன்னிலையாகாது , அவர் சார்பில் காவல்துறையினர் முன்னிலையாகின்றனர்.
எனவே பிரதேச சபையை சட்ட நடவடிக்கை எடுக்க விடாது தடுக்கும் காவல்துறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சி ஆதரவு சபையானது மற்றைய தீர்மானங்கள் போன்று கிடப்பில் போடாது, அடுத்த சபை அமர்வுக்கு முதல் காவல்துறைக்;கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Post a Comment