திருவள்ளுவர் பௌத்த சாசன அமைச்சிடம்?



இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலைய ஆளுகையை இலங்கை பௌத்த சாசன அமைச்சு கைகளில் எடுத்துக்கொண்டுள்ளது.

இதனிடையே மண்டபம் தொடர்பான நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற, அமைச்சரவைக் கூட்டத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில், யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தை பராமரித்து முன்னெடுத்து செல்லும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தின் பிரகாரம், கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக ஒருங்கிணைந்த முகாமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

எனினும் திட்ட நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், கலாச்சார மத்திய நிலையம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக யாழ். மாநகர சபைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மத்திய நிலையத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றை உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புறுதி வரைவு ஆவணத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக யாழ்.மாநகரசபை மண்டபத்தை பராமரிக்க ஆளணி மற்றும் நிதி கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதும் இந்திய அரசு எத்தகைய ஒதுக்கீடுகளையும் வழங்கியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments