காங்கேசன்துறை கடற்கரையை அண்டிய பகுதியில் பிரதேச சபையின் பெயரால் அநாமதேய அறிவித்தல்
காங்கேசன்துறை கடற்கரைக்கு "மீனவர்களை தவிர ஏனையோர் உள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது" என அநாமதேய நபர்களால் பிரதேச சபை மற்றும் மீன் பிடி சங்கம் என அறிவித்தல் துண்டு ஒட்டப்பட்டுள்ளது.
காங்கேசந்துறை - கீரிமலை வீதி, முதலாம் ஒழுங்கை, காங்கேசன்துறை கடற்கரைக்கு செல்கின்றது. அந்த ஒழுங்கையில் சிலர் வசிப்பதுடன் , கடற்கரைக்கு வரும் சிலரும் அந்த ஒழுங்கையினை பாவித்து வருகின்றனர்.
இந்நிலையில் , அந்த ஒழுங்கைக்குள் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ள நீர் தாங்கி, மற்றும் மதில்களில் "மீனவர்களை தவிர ஏனையோர் உள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது" என்ற அறிவித்தலில் கீழ் அடைப்புக்குள் காங்கேசன்துறை பிரதேச சபை மற்றும் மீன் பிடி சங்கம் என காணப்படுகிறது.
காங்கேசன்துறைக்கு என தனியான பிரதேச சபை இல்லாத நிலையில் , வலி.வடக்கு பிரதேச சபையின் உப அலுவலகம் ஒன்றே காங்கேசன்துறையில் அமைந்துள்ளமையால் , இந்த அறிவித்தல் பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றி , தனி நபரால் பிரதேச சபை பெயரினை சட்ட முரணாக பயன்படுத்தி அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்னர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஒழுங்கையில் வசிக்கும் பெண்ணொருவர் , அந்த ஒழுங்கை ஊடாக எவரும் கடற்கரைக்கு செல்ல கூடாது என தடை ஏற்படுத்த முயற்சி செய்ததுடன் , கடற்கரைக்கு வந்தவர்களுடனும் முரண்பட்டுள்ளார்.
அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பெண்ணை அழைத்து ஒழுங்கையூடாக கடற்கரைக்கு செல்பவர்களை மறிக்கும் அதிகாரம் உமக்கு இல்லை. மீறினால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment