வலி.வடக்கில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்போம்
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த காணிகளை விடுவிக்கும் முகமாக உயர்மட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வுகளையும் மேற்கொண்டாம்.
இதில் உடனடியாக விடுவிக்கப்பட கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வழிபாட்டு இடங்கள், பாடசாலைகள் என்பவற்றை விடுவிக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம்.
அதேவேளை , உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்பட்டுகின்றன. அவற்றினை விடுவித்து, முழுமையாக அந்த வீதியை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உடனடியாக விடுவிக்கப்பட முடியாது காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு, விடுவிக்கப்பட கூடிய காணிகளை எதிர்காலத்தில் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுப்போம். விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் பேச்சுக்களை நடாத்தி அது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளோம்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. அந்த காணிகளை வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுக்களை நடாத்தவுள்ளோம்.
அதே போல் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகளிடம் அது தொடர்பிலான தரவுகளை கேட்டுள்ளோம். அந்த தரவுகள் வந்ததும் அதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

Post a Comment