ஊடகங்களிற்கு கதவடைப்பு!
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அரச நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
இதனொரு அங்கமாக தையிட்டி விவகாரம் தொடர்பில் ஆராயவும் யாழ்.மாவட்ட செயலகத்தில் கூட்டமொன்று திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் ஆரம்பிக்க முன்னர் காணொளிகளை பதிவு செய்த நிலையில், கூட்டத்தில் ஊடகவியலாளர் இருக்க முடியாது எனவும் கலந்துரையாடல் முடிந்த பின்னர் வருமாறும் மாவட்ட செயலக ஊடக பிரிவு உத்தியோகத்தரால் அறிவுறுத்தப்பட்டது.
கலந்துரையாடல் தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டே ஊடகவியலாளர்கள் பங்கேற்றமை தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்ட போதும் ஏனைய நிகழ்வுகளுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் கூட்டத்தில் இருக்க முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் அறையில் இருந்து வெளியேறினர்.
மாற்றம், வெளிப்படைத்தன்மை தொடர்பாக அதிகம் வலியுறுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் ஊடகவியலாளர் இருக்கவே முடியாது என தெரிவிக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment