பைபிள் விவகாரம் - திருநீறு பட்டை அணிவித்து நன்றி சொன்ன சிவசேனை
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததார் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி திருநீறு அணிவித்து மரியாதை செய்துள்ளார் சிவசேனை அமைப்பை சேர்ந்தவர்.
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில் , பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.
குறித்த விடயம் சர்ச்சையான நிலையில் சிவசேனை அமைப்பை சேர்ந்த ஜெயமாறன் என்பவர் தலைமை பொலிஸ் நிலையத்தில் இலவசமாக பைபிள் வழங்கும் நடவடிக்கை " மத கலவரத்தை தூண்டும் " எனவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் , வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு என்பவற்றுக்கு அது தொடர்பில் அறிவித்த நிலையில் , குறித்த கிறிஸ்தவ சபையை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு கடிதம் மூலம் பைபிளை வழங்க முற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது முறைப்பாட்டை ஏற்று , உடனடியாக நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ணவிற்கு சிவசேனையை சேர்ந்த ஜெயமாறன் நன்றி தெரிவித்து , பொன்னாடை போர்த்தி திருநீறு பட்டை அணிவித்து கௌரவித்தார்.

Post a Comment