யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தர் மோதி கொலை செய்த சம்பவம் - உழவு இயந்திரம் கிளாலியில் மீட்பு


யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தை பொலிஸார் மீட்டுள்ளனர் 

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் , சாரதியை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர். 

பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். 

உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட்  (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரம் கிளாலி பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து  உழவு இயந்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திர சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் , சாரதியை கைது செய்த தீவிர நடவடிக்கைகளில் பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன

No comments