அல்லைப்பிட்டி சம்பவம் கைதானவர்களுக்கு பிணை - உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளை
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் காசு பிணையில் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் புதன்கிழமை நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து , பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.
அதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்கு படுத்தி தருவதாக கூறியதால் , அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓடியதாகவும் , தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார் அவ்வேளை மண்டைதீவு பொலிஸ் காவலரணில் நின்ற பொலிஸார் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த பொலிஸார் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார்.
பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விட்டனர்.
வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர்.
அதேவேளை , குறித்த நபர்கள் தீவகத்தில் சட்டவிரோதமாக மாடுகளை பிடித்து இறைச்சியாக்கும் கும்பல்களுடன் தொடர்பு என சமூக வலைத்தளங்களில் செய்திகளை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் , கைதான இருவர் மற்றும் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் முன்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தாக பொலிஸார் நீதிமன்றில் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment