யாழில். இயந்திரங்கள் மூலமான கரைவலை தொழிலை தடுக்க கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும், கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கடற்தொழில் அமைச்சரிடம் நேரில் கோரியுள்ளனர்.
கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பின் போது,பாரம்பரிய கரைவலை மீன்பிடித் தொழிலில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் கடல் வளங்கள் அழிவடைவதும், சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதும் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும், எமது மீனவ சமூகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசனைகள் பெறப்படும்.
எமது கடல் வளங்களை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைகளுக்கான நிலைத்த கடற்றொழிலை உறுதி செய்வதே எமது நோக்கம் என கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது, அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளரும் உடனிருந்தனர்.

Post a Comment