இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சி!
திஸ்ஸ விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் அதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அவசரகால சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இக்காலப்பகுதியில் அவசரகால சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைதுகள் இடம்பெற்றுள்ளது என்று எவராலும் குறிப்பிட முடியுமா, அனர்த்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வதற்கே இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது அமுலிலுள்ள அவசரகாலச்சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டமொன்றை நிறைவேற்ற முற்பட்டுள்ளது.எனினும் ஊடக அமைப்புக்கள் மற்றும் எதிர்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றன.
இந்நிலையில் தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்களை அரசு அவசரகாலச்சட்டங்களை முன்னிறுத்தி அடக்க முற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே திஸ்ஸ விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment