பொறுமையாக இருங்கள் - தையிட்டி காணி உரிமையாளர்களுக்கு ஹர்ஷன போதனை




"தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அங்குள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கின்றோம். எனவே, காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்படாது பொறுமை காக்க வேண்டும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

"தையிட்டியை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்குக் கிடையாது. தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்.

இது தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கும் இடையிலான பிரச்சினை. இதில் வேறு தரப்பினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு மேற்படி இரு தரப்புகளும் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். இது இலகுவான காரியம்.

எமது அரசு இந்த விடயத்தில் ஆழ்ந்த கரிசனை செலுத்தியுள்ளது. இரு தரப்புகளும் இணக்கத்துக்கு வருவதற்கான வழிவகைகளை அரசின் விசாரணைக் குழு செய்யும்.  

எனவே, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அங்குள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கின்றோம். இந்த விவகாரத்தில் வேறு தரப்பினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். 

எனவே தையிட்டி காணி உரிமையாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் காணி உரிமையாளர்கள் செயற்படக்கூடாது." - என்றார்.

No comments