தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் அருச்சுனா எம்.பிக்கு விடுத்துள்ள பகிரங்க சவால்


தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்டுள்ள எமது காணிகளுக்கான உறுதிகள் பொய்யான உறுதிகள் என கூறிக்கொண்டும் , எமது போராட்டம் தொடர்பில் நையாண்டி செய்யும் நாடாளுமன்ற ,உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , எமது உறுதிகள் பொய்யான உறுதிகள் என்பதனை நிரூபிக்கப்பட்டு என காணியை இழந்த உரிமையாளர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர். 

யாழ் ஊடக அமையத்தில் தையிட்டி விகாரையால் காணிகளை இழந்த காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை  முன்னெடுத்து வருகிறோம்.

விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 

ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வகையில் மக்களின் காணி என்ற ஏற்றுக் கொள்கிற அமைச்சர் தற்போது மாற்றுக் காணி என்று கதைக்கிறார். மக்கள் மாற்றுக்காணியையோ நஷ்ட ஈட்டையோ நாம் கேட்கவில்லை.

இவர்கள் மாற்றுக்காணி என்று எதை சொல்லுகிறார்கள் மாற்றுக்காணியை எங்கு வழங்கப் போகிறார்கள்? இவர்கள் காக்கைதீவிலும் மாற்றுக் காணியை வழங்க கூடும். அங்கு வாழ முடியாது.

காணிகளை இழந்த எங்களுடன் கலந்துரையாடாமல் புத்த பிக்குவுடன் கலந்துரையாடி காணிகளை விடுவிக்க பேசுகிறார்கள். 

அரசாங்க அதிபர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரனுடன் சென்று புத்தபிக்குவுடன் பேசுகிறார்.

அரச பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இந்த காணிகள் தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை.

அரச அதிபரும் ஆளுநரும் எம்மை அழைத்து பேசி இந்த காணிப் பிரச்சினையை தீர்க்கலாம். ஆனால் அவர்கள் உள்நோக்கத்துடன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

காணியை பிக்கு விட்டுக் தருவதாக சொன்னதாக சொல்கிறார்கள். நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை, நீங்கள் அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். எங்கள் காணியில் உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே கதைக்க முடியும். இந்த நிமிடம் வரையும் எங்களுடன் கதைக்கவில்லை.

இலங்கை சுதந்திரம் அடைய முதல் இருந்த காலத்தில் குறித்த தையிட்டிக்கான உறுதி எம்மிடம் உள்ளது.

தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. போராடும் மக்களை நையாண்டி பண்ண வேண்டாம். முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதன் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிருபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்தனர்.

No comments