யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலும் வீட்டு திட்டங்களை வழங்குவோம்


யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 40 வீதமான வீடுகள் கொட்டில்களாகவிருந்து, தற்போது படிப்படியாக மாறி வந்தாலும் அது முழுமை பெறவில்லை. எனவே விரைவில் பல வீடமைப்பு திட்டங்களை எமது அரசாங்கம் வழங்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

  உலக குடியிருப்பு (World Habitat Day) தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

  யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 40 வீதமான வீடுகள் கொட்டில்களாகவிருந்து, தற்போது படிப்படியாக மாறி வந்தாலும் அது முழுமை பெறவில்லை.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, விசேடமாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் செயற்றிட்டம் உள்ளதால், மேலும் பல வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்படும்.

எமது அரசாங்கத்தினால் வீடமைப்புத் திட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வீதி, குளங்கள் இறங்குதுறை என்பனவும் அபிவிருத்தி செய்யப்படும், எமது அரசாங்கத்தினால் துரித அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும்.

குறிகாட்டுவான் இறங்குதுறை மற்றும் கொழும்புத்துறை இறங்குதுறை அபிவிருத்தி, பரந்தன் இரசாயன தொழிற்சாலையினை மீளச் செயற்படுத்தல் மற்றும் முதலீட்டு வலயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் போதைப் பொருள் மற்றும் வாள்வெட்டுஆகியவற்றை முற்றாக ஓழிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  பொருளாதார ரீதியாக எமது நாடு தற்போது முன்னேறிவருகிறது.டொலரின் பெறுமதி சீராகவுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

No comments