வசதியானவர்கள் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணத்தில் பெரும் வசதி படைத்தவர்கள் வீடுகளை இலக்கு வைத்து , அவர்களின் வீடுகளுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து , நோட்டமிட்டு , வசதியானவர்கள் வீட்டில் திருடி வந்தார் எனும் குற்றச்சாட்டில் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்க நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டு இருந்தன.
அவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் ,வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குறித்த இளைஞன் அவ்வீட்டில் திருடுவதற்கு முன்பதாக , அந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்ததாகவும் , வாடகைக்கு தங்கியிருந்து, திருட்டில் ஈடுபட போகும் வீட்டை நோட்டமிட்ட பின்னர் , வாடகை வீட்டில் இருந்து வெளியேறி ஓரிரு நாட்களில் தான் இலக்கு வைத்த வீட்டில் திருட்டினை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக யாழ்ப்பாணத்தில் வேறு வீடுகளிலும் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளனவா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 07 பவுண் நகை மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
Post a Comment