வேலணை பிரதேச சபை அனுமதியின்றி நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட அனுமதி மறுப்பு


வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம், புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த்  முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்தார். 

முன் மொழிவை சமர்ப்பித்து சபையில் கருத்து தெரிவிக்கையில், 

 வறிய மக்களின் இலக்குவைத்து அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்கடன் நிதி நிறுவனங்கள் கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்திற்குள் நுழைந்து மக்களை அதன் பொறிக்குள் வீழ்த்தி ஏமாற்றி வருகின்றனர்.

எமது பிரதேச மக்கள் நிதிக்கான அவசர தேவை கருதி அதிகூடிய வட்டிகளுக்கு நிதியை பெற்றுக்கொள்கின்றனர்.அதன் பின்னர் குறித்த கடனை செலுத்துவதில் பெரும் இடர்களை சந்திக்கின்றனர்.

பின்னர் நிதி கட்டத்தவறும் கடனாளிகள் வீடுகளுக்கு நேரகாலம்.பாரது நிதி வசூலிக்கும் நபர்கள் சென்று பெரும் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகின்றது. அத்துடன்  கடன் பெற்றவர்களுக்கு மிக அழுத்தங்களை வசூலிப்போர் கொடுக்கின்ற நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக பெண் தலைமை குடும்பம் இக்கடனை பெற்றிருந்தால் குறித்த பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ள சில வசூலிப்பாளர்கள் முயற்சிப்பது மட்டுமல்லாது அதற்கான மன அழுத்தங்களையும் கொடுக்கின்றனர்.

இதனால் தற்கொலை முயற்சிக்கு கடனாளர்கள் செல்லும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்படுகின்றது.

எனவே எமது பிரதேச மக்களது வறுமையை குறித்த நிறுவனங்கள் தமக்கான முதலீட்டு இடங்களாக பயன்படுத்துவதற்கு எமது சபை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து உறுப்பினர் சு.பிரகலாதன் கருத்து தெரிவிக்கையில், 

சட்ட விதிகளை பேணாது எமது பகுதிக்குள் 40 இற்கும் அதிகமான நுண்கடன் நிறுவனங்கள் நுழைந்து மக்களுக்கு கடும் குடைச்சலை கொடுக்கின்றன. இந்த நிறுவனங்களில் பல பதிவுகள் அற்றவையாக இருக்கின்றன.

அத்துடன் இந்த நிறுவனங்களின் பாதிப்பு எமது மக்களுக்கு அதிகமாக வருகின்றது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் நாவலன் கருத்து கூறுகையில், 

 எமது மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த நிறுவனங்களை சபை ஊடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இனிவருங் காலத்தில் மக்கள் நுண் நிதி நிறுவனங்களை நாடாதிருக்க விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதும் அவசியம். 

சில பிரதேச சபைகள் நுண் நிதி நிறுவனங்கள் தமது ஆளுகைக்குள் செல்வதையே தடைசெய்துள்ளது. அதுபோன்று எமது சபையும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என தெரிவித்தார்.

அதனை அடுத்து உறுப்பினர் பார்த்தீபன் கருத்து தெரிவிக்கையில், 

 மக்கள் தமக்கான நிதியின் அவசிய தேவையை நிவர்த்தி செய்ய இந்த நிறுவனங்களை நாடுகின்றனர். அதைத் தடுக்க நாம் எமது பிரதேசங்களில் உள்ள பொது அமைப்புக்கள் ஊடாக மக்கள் அவசர கடன் வசதி  பெறக்கூடிய பொறிமுறையை உருவாக்கி இந்த பிரச்சினைக்கு மாற்றீடாக தீர்வாக கொடுக்கலாம். அது தொடர்பில் எனது வட்டாரத்தில் ஒரு கட்டமைப்பை சட்ட ரீதியாக உருவாக்கி வருவதாக தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து உறுப்பினர் இதய தீபன் கருத்து தெரிவிக்கையில், 

 இந்த நுண்கடன் தொல்லையால் சில நாள்களுக்கு முன்னர் எனது கிராமத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.  சமூர்த்தி வங்கிகள் போன்ற அமைப்புகள் மக்களுக்கு இலகுவான முறையில் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்வது அவசியம் என தெரிவித்தார். 

அதனை அடுத்து சபையின் தவிசாளர் அசோக்குமார் தலைமையில் , சபையின் அனுமதி பெறாது எந்த ஒரு நுண் நிதி நிறுவனமும் உள்நுழைய முடியாது. மாறாக நியாயமான வட்டி வீதங்களுடன் பிரதேச சபையின்  நியமங்களை ஏற்று  சபையின் அனுமதி பெற்றே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு சபையின் நிபந்தனைகளை  ஏற்றுக்கொள்ளாத  நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என  குறித்த முன்மொழிவு ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

No comments