நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு கடலில் மூழ்கியது - 14 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
நெடுந்தீவை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறிய படகில் , நெடுந்தீவில் இருந்து 12 சுற்றுலா பயணிகளும் , படகின் பணியாளர்கள் இருவருமாக 14 பேர் குறிகாட்டுவான் நோக்கி தமது பயணத்தினை இன்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்துள்ளனர்.
நெடுந்தீவுக்கும் , குறிகாட்டுவானுக்கும் இடையில் கடலில் படகு திடீரென பழுந்தடைந்துள்ளது அத்துடன் படகினுள் கடல் நீரும் உட்புக தொடங்கியுள்ளது.
அந்நிலையில் படகில் இருந்த பணியாளர்கள் , இருவரும் படகில் இருந்து வெள்ளைக்கொடியை அசைத்து காட்டியுள்ளனர். அதனை பிறிதொரு படகில் சென்றவர்கள் அவதானித்து , குறித்த படகினை நோக்கி விரைந்துள்ளனர்.
படகு நீரில் மூழ்கிய வண்ணம் காணப்பட்டதனை அடுத்து, படகில் இருந்தவர்கள் தமது படகுக்கு ஏற்றியுள்ளனர். அவ்வாறு ஏற்றிய போதிலும் , 12 பேர் படகில் ஏறிய நிலையில் , இருவர் படகில் ஏற முதல் பழுதடைந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. அந்நிலையில் இருவரும் கடலில் நீந்திய பாதுகாக்க வந்த படகில் ஏறியுள்ளனர்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு தமது படகில் விரைந்து , மூழ்கிய படகில் இருந்து காப்பற்றப்பட்டவர்களை தமது படகில் ஏற்றி குறிகாட்டுவான் கரைக்கு கொண்டு வந்தனர்.
குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான கடற்பயணம் சுமார் ஒரு மணி நேரமாக காணப்படும் நிலையில் , சேவையில் ஈடுபடும் படகுகள் குறித்து கண்காணிப்புக்களும் , படகில் செல்பவர்களின் பாதுகாப்பு மற்றும் , அவர்கள் பாதுகாப்பு அங்கிகள் அணிவதனை உறுதிப்படுத்தவும் , சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது .
Post a Comment