மன்னார் நகர அபிவிருத்திக்கு நிதியுதவி மிக அவசியம் - மன்னார் முதல்வர்


மன்னார் நகர சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க மத்திய அரசு நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் நகர சபையில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர மக்களின் நலன் கருதியும், நகரின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பதும் முதற்கட்ட பணியாக அமையும். மன்னார் நகரில் கழிவுகளை அகற்றுதல், வடிகான்களை அமைத்தல், உள்ளக வீதிகளை அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களை முதல் கட்டமாக முன்னெடுக்க உள்ளோம்.

கடமையை பொறுப்பேற்று நான்கு நாட்களில் பல்வேறு பிரச்சனைகளை அடையாளம் கண்டுள்ளேன். மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மன்னார் பொது விளையாட்டு மைதானம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது குறித்த மைதானம் சீர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நகர சபைக்குச் சொந்தமான உள்ளக வீதிகள் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உள்ளோம். வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற கிராமங்களுக்கான வடிகால் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.பழுதடைந்த நிலையில் உள்ள உள்ளக வீதிகள் சீர் செய்யப்படவுள்ளது.

தரவன் கோட்டை, கீரி வரையிலான பாதை பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. அந்த பாதையை சீர் செய்ய 55 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாதைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் காணப்படும் நிலப்பரப்பில் உல்லாசப் பயணிகளை ஈர்ப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டத்திற்கு 16 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் நகர சபைக்கான வளங்கள் பற்றாக்குறையாக உள்ளது. ஜே.சி.பி, உழவு இயந்திரம்,ஏனைய வாகனங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

எனவே மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறேன். பின்தங்கிய மாவட்டமாக உள்ள மன்னார் நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் எனக் கூறினார்.

No comments