அதானி காற்றாலை மீள வருகின்றதா?



சர்ச்சைக்குரிய அதானியின் காற்றாலைக்கான அனுமதி சத்தம் சந்தடியின்றி மீள வழங்கப்படுவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை புதன்கிழமை (11) மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெறவுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் இன்று; செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நில பரப்பிலும்  கனிய   மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும்,குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.


எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள் ,மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள்  இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரஜைகள் குழு அறிவித்துள்ளது.


No comments