பிரித்தானியக் குடிமகன் கொழும்பில் கைது! பயங்கரவாத
பயங்கரவாதக் குழுவொன்றிற்கு நிதி சேகரித்து அனுப்பியதற்கான குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 43 வயதான பிரித்தானியக் குடிமகன் ஒருவரை இலங்கைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர் 2009 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
நவம்பர் 30, 2024 அன்று கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் அவர் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடைக்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்திருந்தனர். இதனையடுத்து சந்தேக நபர் விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருந்து நிதி திரட்டியதாகவும், கொழும்பு மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள நபர்களுக்கு பணம் அனுப்பியதாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு - வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து விமான நிலைய பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment