வினோ நோகராதலிங்கத்திற்கும் விருப்பமில்லையாம்!

 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உறவை பேணி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் அரசியல் அரங்கிலிருந்து தொடர்ந்தும் விலகியே வருகின்றனர்.அவ்வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக  முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கமும் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை  உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகியமை. 

அதைப்போலவே வடக்கு கிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். 

மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும்  மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது. 

அதற்கு வழிவிட  வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும். 

 என்னுடையதும் ஏனைய சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களதும்  போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் என கருதுகின்றேன்.

வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள, ஆளுமைமிக்க இளம் தலைவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின், இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேறவேண்டும். மக்கள் மனதறிந்து எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என விநோநோகதராலிங்கம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஏற்கனவே சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டோர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments