தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு


அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக மூத்த போராளி இராகவன் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் பொது வேட்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறுகிய நோக்கில் இனவாதத்தை பேசி தமது எதிர்கால அரசியலுக்கு திட்டமிடுகின்றனர்.

இன்று புலம்பெயர் நாடுகளில் செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக பணம் தாருங்கள் என புலம்பெயர் தமிழ் மக்களிடம் பணத்தைப் பெற்று அதனை கையகப்படுத்தி உள்ளனர். 

அவர்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளனர்.

ஏனெனில் பிரச்சனை தீர்ந்து விட்டால் நீதி திரட்ட முடியாது. தாங்கள் நினைத்தது போல் வாழ முடியாது என்ற அச்சத்தின் காரணமாக தற்போது பொது வேட்பாளரை நிறுத்தி இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர். 

அதற்கான நிதியினை வழங்கும் புலம்பெயர் புலிகள் என தம்மை அடையாளப்படுத்தும் விடுதலைப் புலிகள் காலத்தில் பணத்தை பதுக்கிய கும்பல் தற்போது பொது வேட்பாளருக்கு நிதியை வழங்குவதாக அறிகிறோம்.

இவர்களது செயற்பாடுகளால் தெற்கில் குறைந்திருக்கும் இனவாதத்திற்கு உரம் போட்டுள்ளனர். தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்தியா உதவும், சர்வதேசம் வரப்போகுது, இதனால் தமிழீழம் வரப்போகிறது என சொல்லி தெற்கில் பூதாகரமாக காட்டப்படும். 

விடுதலைப் புலிகள் இருக்கும்போது  இலங்கை அரசாங்கத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. சரி தவறுக்கு அப்பால் இராணுவ கட்டமைப்பை வைத்திருந்தனர். 

ஆனால் இவர்களுக்கு எதுவும் கிடையாது. விடுதலைப் புலிகளின் நிறங்களான சிவப்பு மஞ்சளை பயன்படுத்தி சிறுவர்கள் மற்றும் இளையோரை பயன்படுத்தி உணர்ச்சியை தூண்டி தற்கொலைக்கு அனுப்ப செயற்படுகிறார்கள் - என்றார்

No comments