சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விமோசனம்?
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினை சுமூகமாக இயக்க வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை பொதுமக்களால் போராட்டம் ஒன்று கண்டிவீதியை வழிமறித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் குறிப்பாக கடந்த 5 நாட்களில் எந்தவித நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படாமல் வைத்தியசாலை மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்ற வைத்திய அத்தியட்சகர் மட்டும் கடந்த 5 நாட்களும் தனியாக இருந்து பல்வேறு சிகிச்சைகளை வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் தென்மராட்சி மக்களை கைவிட்டு பணிப்புறக்கணிப்பு, தொழிற்சங்க போராட்டம் என நகைப்புக்குரிய போராட்டத்தை வைத்தியர்கள் நடத்தியுள்ளனர்.
யாழ் மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையாக இருக்க வேண்டிய வைத்தியசாலை முன்னேற்றமின்றி இன்றும் கிராமிய வைத்தியசாலை போன்று காணப்படுகின்றது.
ஆனால் தான் பதவியேற்ற 20 நாட்களுக்குள் பல்வேறு பணிகளை அதிரடியாக செய்த வைத்தியர் அர்ச்சுனா அவர்களை இந்த வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றுமாறு ஒரு பொய்யான கோரிக்கையை முன்வைத்து அவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தார்கள்.
ஆகவே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அந்த வைத்தியர்களை பணிக்கு திரும்புமாறு நாங்கள் வைத்திருந்த கோரிக்கைக்கான கெடு காலம் நேற்றுடன் நிறைவடைந்து விட்டது.
எனவே வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இந்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக தொடர்ந்தும் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் முன்னெடுக்கவேண்டுமெனவும் போராட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Post a Comment