அர்ப்பணிப்பு ஊடகங்களில் வெளிவரவில்லை!
இன்று உலகெங்கும் சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையிலும் பல பாகங்களிலும் சர்வதேச தாதிய தினம் அவர்கள் கடமை புரியும் நிலையங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாதியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை கண்டுகொள்ளப்படவில்லையென மருத்துவர் சத்தியமூர்த்தி கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இப்போது 45 ஆயிரம் தாதியர்கள் கடமையில் இருக்கின்றார்கள். உலக வங்கியின் கணிப்பின்படி இலங்கையில் ஒரு லட்சம் பொதுமக்களுக்கு 240 தாதியர்கள் கடமையாற்றுகின்றார்கள். இதனை நாம் ஏனைய நாடுகளோடு ஒப்பீடு செய்தால் ஒரு லட்சம் பொது மக்களுக்கு அமெரிக்காவில் 1250 தாதியர்களும் அவுஸ்திரேலியாவில் 1080 தாதியர்களும் ஐக்கிய ராஜ்யத்தில் 920 தாதிர்களும் சிங்கப்பூரில் 620 தாதியர்களும் கடமையாற்றுகின்றார்கள். வளர்ந்து வரும் நாடுகளிலும் இலங்கை போன்று தாதியர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. குறைவான தாதியர் எண்ணிக்கையில் பூரண சேவையை வழங்குவதில் இலங்கை பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.
இலங்கையின் சுகாதார சேவை வளர்ச்சி அடைந்த(Developed Countries) நாடுகளின் சுகாதார சேவையை நோக்கி பயணிக்கின்றது. இருப்பினும் சுகாதார சேவைக்கான நிதி ஒதுக்கீடு, மனிதவளம் என்பன குறைவாகவே காணப்படுகின்றது.
தற்போதைய இலங்கையில் தாதியர்களின் கடமை காலை ஏழு மணி தொடக்கம் மதியம் ஒரு மணி வரையும், மத்தியம் ஒரு மணி தொடக்கம் இரவு 7 மணி வரையும், இரவு 7 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 7 மணி வரையும் ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அனேகமான வைத்தியசாலைகளில் தாதியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கடமைகளை(Two shifts ) செய்வது வழமையாக காணப்படுகின்றது. இது அவர்களுடைய கடமையின் தரத்தில் தாக்கத்தை செலுத்துகின்றது. எதிர்காலத்தில் தாதியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு கடமைகளும் ஓய்வும் வழங்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் பல வைத்திய சாலைகளில் அவர்களுக்கான விடுப்பு வழங்கப்படாமல் கட்டாய கடமைக்கு அமர்த்த படுகின்றார்கள். அர்ப்பணிப்போடு செய்யப்பட்ட பல சம்பவங்கள் ஏதும் ஊடகங்களில் கிரமமாக வெளிவரவில்லை. ஏதாவது ஒரு சம்பவத்துக்கு பின்னர் ஒட்டுமொத்த தாதியர்கள் மீதான எதிரான கருத்துகளும், பொதுமக்களின் மனநிலையும் அவர்களுக்கு நிச்சயம் மனச்சோர்வை ஏற்படுத்தி இருக்கும்.
யாழ் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரையில் 680 தாதியர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
1350 படுக்கைகளை கொண்ட இந்த வைத்தியசாலையில் தினசரி அனுமதிக்கப்படுகின்ற நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கும் , பல்வேறு கிளினிக் பிரிவுகளில் சிகிச்சை பெறும் 2500 மேற்பட்ட நோயாளிகள், மற்றும் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு என சுவர்களை வழங்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம்.
அண்மைய காலங்களில் வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் மற்றும் பிரச்சனைகள் ஊடகங்களின் ஊடாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இலங்கையில் சுகாதார சேவை மேலும் வலுவடைய அதிகளவு நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்ட ஆளணியும் போதிய பயிற்சியும் முக்கியமானயென மருத்துவர் சத்தியமூர்த்தி கவலை வெளியிட்டுள்ளார்.
Post a Comment