ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு


ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என சித்த மருத்துவ மாணவர்களின் பிரநிதியான வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இலங்கை பூராகவும் 359 சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலமே நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எங்களுடைய பிரச்சனை தொடர்பில் பேசியிருந்த போது, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 60 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளக பயிற்சி என்பது அனைத்து மாணவர்களுக்குமான உரிமையாகும். எவ்வாறு 60 மாணவர்களுக்கு மாத்திரம் இந்த அனுமதியினை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வழங்க முடியும்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவ்வாறாயின் அது அரசாங்கத்தின் தவறு ஒழிய மாணவர்களுடைய தவறல்ல.

இதற்குக் காரணம் ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள். இவர்களுடைய இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நமது கற்க நெறியை பூரணமாக நிறைவு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

தற்பொழுது 30 வயதினை எட்டி இருக்கின்ற போதிலும் நீண்ட காலமாக உள்ளகப் பயிற்சியினை முடிக்காததனால் எமது கற்கை பூரணப்படுத்தப்படவில்லை.

உள்ளக பயிற்சி நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே ஆயுர்வேத சங்கத்தில் எங்களை ஒரு வைத்தியராக பதிவு செய்ய முடியும். எனவே நமது எதிர்காலத்தை கருத்தில் எடுத்து கற்கை நெறியை பூர்த்தி செய்ய ஏதுவாக உள்ளக பயற்சியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம் என்றார்.  

No comments