காசு மோசடி:தினப்புயல் பிரகாஸ் கைது!



வவுனியாவிலிருந்து  தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபரொருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று(24) ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிலிருந்து செயற்பட்ட தினப்புயல்  எனப்படும் இணையத்தை சேர்ந்தவரே கைதாகியுள்ளார்.

மோசடியில் ஈடுபட்ட நபர் கனடாவில் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் கூறியதுடன் அவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ள ஊடகவியலாளர்களுடன் ஊடகவியலாளராக அழைத்து சென்று கனடாவில் இறக்கிவிடுவதாக யாழ்ப்பாண இளைஞன் ஒருவரை ஏமாற்றியுள்ளாhர்.

ஏமாற்றப்பட்ட இளைஞனிடம் இருந்து 43 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று இளைஞனுக்கு ஊடக நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டையையும் வழங்கியுள்ளார்.

பணத்தினை பெற்று நீண்ட காலமாகியும் கனடாவில் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதாக இளைஞன் அறியாத நிலையில் தனது பணத்தினை மீள தருமாறு கோரிய வேளை இளைஞனின் தொடர்பை துண்டித்துள்ளார்.

அதனால் இளைஞன் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வவுனியாவில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதேவேளை இளைஞனுக்கு வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை அந்த ஊடக நிறுவனத்தினையும் மோசடி செய்த நபரே நடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

காவல்துறையினரின் தீவிர விசாரணைகளையடுத்து தலைமறைவாகி இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments